பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா அதிவேகமாக ஏழ்மையை ஒழித்து வருகிறது என்று முன்னணி சர்வதேச அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
modi

திரு. நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 2019 மே 30 ஆம் தேதியன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடைய தலைமையிலான இரண்டாவது ஆட்சிக் காலத்தின் தொடக்கமாக அது இருந்தது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு பிறந்த ஒருவர் முதன்முறையாக பிரதமர் பதவிக்கு வந்தவராக அவர் இருக்கிறார். திரு. மோடி இதற்கு முன்னதாக 2014 முதல் 2019 வரையில் இந்தியப் பிரதமராக இருந்தார். குஜராத் மாநிலத்தில் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற தனிச்சிறப்பும் அவருக்கு உண்டு. அக்டோபர் 2001 முதல் மே 2014 வரையில் அவர் குஜராத் முதல்வராக இருந்தார்.

2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில், திரு. மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றது. இரண்டு முறையும் தனிப்பெரும்பான்மை பெற்றது. 1984 தேர்தல்களில் தான் இதற்கு முன்பு ஓர் அரசியல் கட்சி தனிப்பெரும்பான்மை பலம் பெற்றது.

‘அனைவரும் ஒன்றிணைந்து, ஒன்றாக உயர்ந்து, அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம்’ என்ற குறிக்கோளால் உத்வேகம் பெற்ற திரு மோடி ஆட்சி நிர்வாகத்தில் கருத்தியல் அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்தினார். பங்கேற்புடன் கூடிய, வளர்ச்சி சார்ந்த மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தைத் தரும் வகையில் இந்த மாற்றங்கள் இருந்தன. அந்தியோதயா அல்லது திட்டங்கள் மற்றும் சேவைகள் கடைசி குடிமகன் வரை சென்று சேர்வதை உறுதி செய்வது என்ற இலக்கை எட்டுவதற்காக பெரிய அளவில் வேகமாக பிரதமர் பணியாற்றினார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா அதிவேகமாக ஏழ்மையை ஒழித்து வருகிறது என்று முன்னணி சர்வதேச அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட, ஏழைகள் நலன் சார்ந்த பல திட்டங்களால் இது சாத்தியமாகியுள்ளது.

இப்போது உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டமான, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைக் கொண்டதாக இந்தியா இருக்கிறது. 50 கோடி இந்தியர்களுக்குப் பலன் தரும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தில் கீழ்த்தட்டு மக்களுக்கு கட்டுபடியாகும் வகையில் உயர்தரமான சிகிச்சை வசதிகள் கிடைக்கின்றன.

ஆரோக்கியம் குறித்த உலகின் மிகவும் பெருமைக்குரிய பத்திரிகையான Lancet, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைப் பாராட்டியுள்ளது. சுகாதார வசதிகள் கிடைக்கவில்லையே என்று ஏமாற்றத்தில் இருந்த பெருமளவு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இந்தத் திட்டம் இருக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஆரோக்கிய வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளிக்கும் பிரதமர் திரு. மோடியின் முயற்சிகள் பற்றியும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

ஏழைகளுக்கு நிதிச் சேவை கிடைக்காமல் போவதன் பரிதாபம் பற்றிப் புரிந்து கொண்டுள்ள பிரதமர் திரு. மோடி, ஒவ்வொரு இந்தியருக்கும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பிரதமரின் ஜன் தன் யோஜ்னா என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். இப்போது 35 கோடிக்கும் அதிகமான ஜன் தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன. வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப் பட்டிருப்பதுடன், அதிகாரம் கிடைக்கச் செய்வதற்கான வாயில்கள் ஏழைகளுக்குத் திறக்கப்பட்டுள்ளன.

 

ஜன் தன் திட்டத்தில் அடுத்த கட்டமாக, சமூகத்தில் அதிக சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்குக் காப்பீட்டு வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜன் சுரக்சா திட்டத்துக்கு திரு. மோடி முக்கியத்துவம் அளித்தார். மூன்று அம்சங்களைக் கொண்ட ஒரே திட்டம் என்ற JAM (ஜன் தன் – ஆதார் – மொபைல்) திட்டத்தின் மூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு, தொழில்நுட்பத்தால் முன்னெடுக்கப்பட்ட வெளிப்படைத்தன்மை, வேகம் ஆகியவை உறுதி செய்யப் பட்டுள்ளன.

 

நாட்டில் முதன்முறையாக, அமைப்புசாரா துறையுடன் தொடர்புள்ள 42 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு, பிரதமரின் ஷ்ரம் யோகி மன் தன் திட்டத்தின் கீழ் இப்போது ஓய்வூதிய வசதியும் அளிக்கப் பட்டுள்ளது. 2019 தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், வர்த்தகர்களுக்கும் இதேபோன்ற ஒரு ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

2016ல் தொடங்கப்பட்ட பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. 7 கோடி பயனாளிகளுக்கு, பெரும்பாலானவர்களாக பெண்களுக்கு, புகையில்லா சமையலறை வசதி அளிக்கும் வகையில், பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமாக இது அமைந்தது.

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகியும் மின்சார வசதி இல்லாதிருந்த 18,000 கிராமங்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டது.

இந்தியர் எவரும் வீடில்லாமல் இருக்கக் கூடாது என்று திரு. மோடி விரும்புகிறார். இந்த லட்சியத்தை எட்டுவதற்காக 2014 முதல் 2019 வரையில் 1.25 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 2022க்குள் `அனைவருக்கும் வீடு’ என்ற பிரதமரின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், இந்தத் திட்டத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

திரு. நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்தமானதாக விவசாயத் துறை இருக்கிறது. 2019 இடைக்கால பட்ஜெட்டில், பிரதமரின் கிஷான் சம்மான் நிதி என்ற பெயரில் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. 24 பிப்ரவரி 2019-ல்  இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, சுமார் மூன்று வாரம் முதல் உரிய காலத்தில் உதவித் தொகை தவணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சிக் காலத்தில், முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமரின் விவசாயிகள் பயன் திட்டங்களை எல்லா விவசாயிகளுக்கும் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. முன்பிருந்த 5 ஏக்கர் என்ற உச்சவரம்பை நீக்க முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ.87,000 கோடி செலவிடும்.

மண்வள அட்டை, சந்தைப்படுத்தலை செம்மையாக்க E-NAM வசதி, பாசனத் திட்டத்தில் புதிய கவனம் செலுத்துதல் போன்ற வகைகளில் தடம் பதிக்கும் முயற்சிகளிலும் திரு. மோடி கவனம் செலுத்துகிறார். நீர்வளம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் கையாள்வதற்கு ஜலசக்தி அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை உருவாக்கியதன் மூலம் 2019 மே 30 ஆம் தேதி திரு. மோடி முக்கியமான அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.

2014 அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளன்று, நாடு முழுக்க தூய்மையை ஏற்படுத்தும் வகையில் `தூய்மை இந்தியா இயக்கத்தை’ பிரதமர் தொடங்கி வைத்தார். அதன் அளவும் தாக்கமும் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. 2014ல் 38 சதவீதமாக இருந்த கழிப்பறை வசதி, இப்போது 99 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் திறந்தவெளிக் கழிப்பறை இல்லாத பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளன. கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்குத் தேவையான  பல நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன.

தூய்மை இந்தியா இயக்கத்துக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதனால் 3 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

மாற்றத்தை ஏற்படுத்துவதில் போக்குவரத்து வசதிக்கு முக்கிய பங்கு உள்ளது என்று திரு. மோடி நம்புகிறார். அதனால் தான் நெடுஞ்சாலை, ரயில்வே, ஐ-வழிகள் மற்றும் நீர்வழிகள் என எதுவாக இருந்தாலும் புதிய தலைமுறை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் வகையில் மத்திய அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. உடான் (UDAN) திட்டத்தின் மூலம் மக்களுக்கு விமானப் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி, நகரங்களுடன் இணைப்பு வசதி மேம்படுத்தப் பட்டுள்ளது.

இந்தியாவை சர்வதேச உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சியாக `மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் திரு. மோடி தொடங்கி வைத்தார். இதனால் மாற்றத்துக்கான பயன்கள் கிடைத்தன. உதாரணமாக, 2014ல் 2 செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில், 2019ல் அந்த எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது. `தொழில் செய்வதில் எளிமையான சூழல்’ என்ற நிலையை உருவாக்குவதில் இந்தியா மேம்பட்டிருக்கிறது. 2014ல் 142வது இடத்தில் இருந்த இந்தியா 2019ல் 77வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 2017ல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்றக் கூட்டத்தின் மூலமாக ஜி.எஸ்.டி. திட்டத்தை மத்திய அரசு அமல் செய்தது. `ஒரே தேசம், ஒரே மாதிரியான வரி’ என்ற கனவை நனவாக்குவதாக அது அமைந்தது.

அவருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. உலகின் மிகப் பெரிய சிலையான, சர்தார் பட்டேலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒற்றுமைக்கான சிலை இந்தியாவில் அமைக்கப்பட்டது. விவசாயிகளின் உபகரணங்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து எடுக்கப்பட்ட மண் ஆகியவற்றை சேர்த்து சிறப்பு இயக்கத்தின் மூலம் இந்தச் சிலை அமைக்கப்பட்டது. `ஒன்றுபட்ட பாரதம், ஒப்பற்ற பாரதம்’ என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் வகையில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் விஷயங்களில் பிரதமர் மோடிக்கு அலாதிப் பிரியம்  உண்டு. சுத்தமான, பசுமையான பூமியை உருவாக்குவதற்கு, இடைவெளிகளைக் குறைக்க வேண்டும் என்று அவர் அடிக்கடி கூறி வருகிறார். குஜராத் முதல்வராக இருந்த காலத்தில், பருவநிலை மாற்றத்தை சமாளிக்க, புதிய சிந்தனைகளுடன் கூடிய தீர்வுகளை உருவாக்குவதற்காக பருவநிலை மாற்ற இலாகா என்ற தனி துறையை திரு. மோடி வைத்திருந்தார். 2015 ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் நடைபெற்ற COP21 மாநாட்டில் இந்த உத்வேகத்தைக் காண முடிந்தது. உயர்நிலை கலந்துரையாடல்களில் பிரதமர் மோடி முக்கிய பங்கு வகித்தார்.

பருவநிலை மாற்றத்தில் இருந்து ஒருபடி முன்னேறி, பருவநிலை நியாயம் பற்றி பிரதமர் திரு. மோடி பேசினார். பூமியை செம்மையானதாக உருவாக்குவதில் சூரிய சக்தியைப் பயன்படுத்தும் புதுமையான முயற்சியாக சர்வதேச சூரியசக்திக் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்குவதற்காக, பல நாடுகளின் தலைவர்கள் 2018 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவருடைய முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் பிரதமர் திரு. மோடிக்கு `சாம்பியன்ஸ் ஆஃப் எர்த் விருது’ வழங்கப்பட்டது.

பருவநிலை மாற்றங்களால் பூமியில் இயற்கைப் பேரழிவுகள் நிகழ்கின்றன என்ற உண்மையை நன்றாக உணர்ந்ததால், பேரழிவு மேலாண்மையில் புதிய அணுகுமுறையை திரு. மோடி கொண்டு வந்தார். தொழில்நுட்பத்தின் சக்தியையும், மனிதவளங்களின் பலத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் இது அமைந்துள்ளது. குஜராத்தின் முதல்வர் என்ற முறையில், 2001 ஜனவரி 26 பூகம்பத்தால் ஏற்பட்ட பேரழிவுகளில் இருந்து மாநிலத்தை மீட்டெடுத்தார் மோடி. அதேபோல, குஜராத்தில் வெள்ளத்தை தடுக்கவும், வறட்சிகளை சமாளிக்கவும் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தினார். அவற்றுக்கு சர்வதேச அளவில் பாராட்டுகள் கிடைத்தன.

நிர்வாகச் சீர்திருத்தங்களின் மூலமாக குடிமக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்கு திரு. மோடி முன்னுரிமை அளித்தார். மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுவதை உறுதி செய்வதற்கு குஜராத்தில் மாலை நேர நீதிமன்றங்களைத் தொடங்குவதில் அவர் முன்னுதாரணமாக இருந்தார். வளர்ச்சிப் பணிக்கு முட்டுக்கடையாக உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விரைவுபடுத்துவதற்காக மத்தியில் PRAGATI (Pro-Active Governance And Timely Implementation) என்ற திட்டத்தை அவர் தொடங்கினார்.

திரு. மோடியின் வெளிநாட்டுக் கொள்கை முயற்சிகள், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் உண்மையான திறமை மற்றும் பங்களிப்பை உணரச் செய்வதாக இருந்தன. தனது முதலாவது ஆட்சிக் காலத்தை சார் நாடுகளின் அனைத்து தலைவர்களின் முன்னிலையில் அவர் தொடங்கினார். இரண்டாவது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்துக்கு BIMSTEC தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். ஐ.நா. பொதுச் சபையில் அவர் ஆற்றிய உரை உலகம் முழுக்க பாராட்டுகளைப் பெற்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு நேபாளத்துக்கு இருதரப்பு உறவுகளுக்காக பயணம் மேற்கொண்ட முதலாவது பிரதமராக திரு. மோடி இருந்தார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கும், 31 ஆண்டுகளுக்குப் பிறகு பிஜி தீவுகளுக்கும், 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஐக்கிய அமீரகம் மற்றும் செஷல்ஸ் தீவுகளுக்குச் சென்ற முதலாவது இந்தியப் பிரதமராக திரு. மோடி இருந்தார். பதவியேற்ற பிறகு ஐ.நா., பிரிக்ஸ், சார்க் மற்றும் ஜி-20 உச்சி மாநாடுகளில் திரு. மோடி கலந்து கொண்டுள்ளார். பல வகையான உலகப் பொருளாதார மற்றும் அரசியல் விஷயங்களில் இந்தியாவின் தலையீடுகள் மற்றும் கருத்துகளுக்குப் பரவலான வரவேற்பு கிடைத்தது.

சவுதி அரேபியா அரசர் அப்துல் அஜீஸ் சார்பில்  பொது மக்களுக்கு வழங்கப்படும் உயரிய கவுரவ விருது உள்ளிட்ட பல விருதுகள் பிரதமர் திரு. மோடிக்கு வழங்கப்பட்டுள்ளன. ரஷியா (The Order of the Holy Apostle Andrew the First), பாலஸ்தீனம் (Grand Collar of the State of Palestine), ஆப்கானிஸ்தான் (Amir Amanullah Khan Award), ஐக்கிய அமீரகம் (Zayed Medal) மற்றும் மாலத்தீவுகள் (Rule of Nishan Izzuddeen) ஆகிய நாடுகளின் உயர் விருதுகளும் திரு. மோடிக்கு வழங்கப் பட்டுள்ளன. அமைதி மற்றும் வளர்ச்சிக்கான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், 2018 ஆம் ஆண்டில் பிரதமருக்கு, பெருமைக்குரிய சியோல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.

`சர்வதேச யோகா தினம்’ கடைபிடிப்பது தொடர்பாக நரேந்திர மோடியின் உறுதியான அழைப்புக்கு ஐ.நா.வில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதன்முதலாக உலகெங்கும் 177 நாடுகள் ஒன்று சேர்ந்து ஜூன் 21 ஆம் தேதியை `ஐ.நா.வில் சர்வதேச யோகா தினமாக’ கடைபிடிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றின.

1950 செப்டம்பர் 17ஆம் தேதியன்று குஜராத்தில் சிறிய நகரில் பிறந்தவர் திரு. மோடி. அவருடைய குடும்பம், சமூகத்தில் விளிம்புநிலையில் உள்ள `இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ பிரிவைச் சேர்ந்தது. அவர் ஏழ்மையான ஆனால் பாசம் மிகுந்த குடும்பத்தில், `சேமிக்க ஒரு ரூபாய் கூட இல்லாத’ குடும்ப சூழ்நிலையில் வளர்ந்தார். வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் பட்ட கஷ்டங்கள் அவருக்கு கடின உழைப்பின் அருமையை உணர்த்தியது மட்டுமின்றி, சாமானிய மக்களின் தவிர்க்கக் கூடிய துன்பங்களையும் கற்றுக் கொடுத்தது. இதனால் மிக இளம் வயதிலேயே நாட்டுக்கும், மக்களுக்கும் சேவையாற்ற வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு ஏற்பட்டது. தேச கட்டமைப்புக்கு அர்ப்பணித்துக் கொண்டுள்ள ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) என்ற தேசிய அமைப்பில் அவர் ஆரம்ப கட்டத்தில் இணைந்து பணியாற்றினார். பிறகு அரசியலில் ஈடுபாடு கொண்டு பாரதீய ஜனதா கட்சியில் மாநில மற்றும் தேசிய அளவில் இணைந்து பணியாற்றினார். குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. அரசியல் அறிவியல் படித்திருக்கிறார் திரு. மோடி.

மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், அவர்கள் நலனை மேம்படுத்தவும் பாடுபடுவதால் நரேந்திர மோடி `மக்களின் தலைவராக’ இருக்கிறார். மக்கள் மத்தியில் இருப்பது, அவர்களுடைய ஆனந்தங்களைப் பகிர்ந்து கொள்வது, அவர்களின் துயரங்களை தீர்ப்பதைத் தவிர அவருக்கு மனநிறைவு அளிக்கும் விஷயம் வேறு எதுவும் கிடையாது. களத்தில் உள்ள மக்களுடன் தொடர்பில் இருப்பது என்ற அவருடைய வலுவான `தனிப்பட்ட தொடர்பு’ என்பது, இணையதளத்தில் அவருடைய தொடர்புகள் மூலம் வெளிப்படுகிறது. இந்தியாவில் தொழில்நுட்பம் சார்ந்த பெரிய தலைவராக அவர் கருதப்படுகிறார். மக்களுடன் தொடர்பு கொள்வது மற்றும் அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இணையதள வசதிகளை அவர் பயன்படுத்திக் கொள்கிறார். முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், சவுண்ட் கிளவுட், Linkedin, Weibo உள்ளிட்ட  இதர தளங்கள்  வாயிலாக சமூக வலைதளங்களில் தீவிரமான செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறார் அவர்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, எழுத்துத் துறையில் நரேந்திர மோடி மகிழ்ச்சி அடைகிறார். அவர் கவிதைகளும், பல புத்தகங்களும் எழுதியுள்ளார்.  வேகமான செயல்பாடுகள் கொண்ட தினசரி வாழ்வை, உடல் மற்றும் மனதை பலப்படுத்தி, அமைதியின் சக்தியை அளிக்கும் யோகாவுடன் தொடங்குகிறார் திரு. மோடி.