ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் சேரலாம்-கலெக்டர் தகவல்

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் சேரலாம் என மதுரை கலெக்டர் சங்கீதா தெரிவித்து உள்ளார்.

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் சேரலாம்-கலெக்டர் தகவல்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக தூய்மை பணியாளர்கள் நலவாரியம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அமைப்புசாரா தூய்மைப் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களிலும், தனி நபராகவும் பணிபுரியும் தூய்மை பணியாளர்களும் உறுப்பினர்களாக சேரலாம்.


ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அமைப்பு சாரா தூய்மைப் பணியாளர்கள், தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் இருந்தோ அல்லது மதுரை தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகியும் விண்ணப்பங்களைப் பெற்று கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர், உதவி செயற்பொறியாளர், செயல் அலுவலர், கிராம நிர்வாக அலுவலரின் கையொப்பத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அதில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், தூய்மை பணியாளர்களுக்கான அடையாள அட்டை ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் சேரலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்து உள்ளார். இந்த நல வாரியத்தில், பிறவாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் சேர முடியாது. வாரியத்தில் சேரும் நபர்கள் தற்போது தூய்மைப்பணி புரிபவர்களாகவும் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். வாரிய உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி, கல்வி உதவித் தொகை, தொழிற்படிப்பு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு, கருக்கலைப்பு, கண் கண்ணாடி மற்றும் முதியோர் ஓய்வு ஊதியம் ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள டி.ஆர்.டி.ஏ. வளாகத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அந்த அலுவலகத்தின் 0452-2529848 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.