ஆடிப்பூரம் என்னும் விழா

ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பூரம் என்னும் விழா
andal

ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில்  தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.

ஆடி மாதத்தில் வரும் பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆடிப்பூர நாளில்தான் அன்னை பூமாதேவியே ஸ்ரீ வில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் ஆண்டாளாக அவதரித்தார். ஆடிப்பூரம் விரதம் இருந்து அம்மனை தரிசித்தால் திருமண வரம் கிடைக்கும் வளைகாப்பிற்கு வளையல் வாங்கிக் கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்
 

அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள்  அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம். 

சைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த வெள்ளிக் கிழமையின் பெயரைக் கொண்டு  அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக எழுந்தருளியுள்ளாள். இதிலிருந்தே ஆடிப்பூரத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.

அம்மன் நித்ய கன்னி என்பதால் அம்மனுக்கு பிள்ளைப்பேறு வளைகாப்பு கிடையாது என்பது ஐதீகம். அதற்காக ஆடிப்பூரம் அன்றைக்கு அம்மனுக்கு வளையல் அணிவித்து இன்று வளைகாப்பு தினமாக கொண்டாடப் படுகிறது.

ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள். ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திர நாள் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். சித்தர்களும், முனிவர்களும் இந்த நாளில்தான் தங்களுடைய தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இனிமையாக பேசுவார்கள். அனைவரையும் நேசிப்பார்கள். அனைவரையும் நேசிக்க வைப்பார்கள். பூரம் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரம். சுக்கிரனின் தெய்வம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். எனவேதான் ஆடிப்பூரத்தில் பிறந்த ஆண்டாள் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை நேசித்து அவரையே மணந்தாள். காதல் கைகூடவும், மனதிற்கு பிடித்த நபரை கை பிடிக்கவும் சுக்கிரபகவானின் அருள் வேண்டும். சுக்கிரன் அருள் இருந்தால் கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும், தாம்பத்ய ஒற்றுமைக்கும் காரணம் சுக்கிரனே. எனவேதான் பூரம் நட்சத்திரத்தில் விரதம் இருந்தால் திருமண வரம் கிடைக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர்.

 

கோயிலில் அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல்களை வாங்கி அணியும் திரமணமாகாத பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும். அதேபோல்  திருமணமாகியும் குழந்தைப் பேறு இல்லாத பெண்களுக்கு நல்ல மக்கட்பேறு கிட்டும். ஆடிப்பூரம் அன்று அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனுக்கு  கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம் என்றும் கூறப்படுகிறது.

பிரிந்த தம்பதியர் ஒற்றுமை சஷ்டாஷ்டக தோஷம் இருக்கும் தம்பதியரும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த தம்பதியர்கள், தொழில் போட்டியால் பிரிந்த கூட்டாளிகள் ஒற்றுமை ஏற்பட ஆடிப்பூர நாளில் ஆண்டாளை வணங்க தம்பதியர் ஒற்றுமை ஏற்படும். பிரிந்தவர்கள் கூடுவார்கள். பகைவர்களும் நண்பர்கள் ஆவார்கள்.