கற்கடக மாதம்

ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம்

கற்கடக மாதம்
aadi

ஆடி மாதம் தெய்வங்களை வழிபட வேண்டிய முக்கியமான மாதமாகும். சில தமிழ் மாதங்கள் சைவ வழிபாட்டுக்கு ஏற்றதாகவும், சில மாதங்கள் வைணவ வழிபாட்டுக்கு ஏற்றதாகவும் இருக்கும். ஆனால் இரண்டு சமய தெய்வங்களுக்குமே உகந்த மாதம் என்றால் அது ஆடி மாதம்தான். 

மாதங்களைப் பொறுத்தவரை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது. இதில் தஷ்ணாயணம் புண்ணிய காலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரை தஷ்ணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்ராயணம் என பிரிக்கப்பட்டுள்ளது. சூரியனின் பாவன இயக்கத்தை (வடகிழக்கு, தென்கிழக்கு) வைத்து இது வரையறுக்கப்படுகிறது.

தஷ்ணாயணம் துவக்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்த்ரீகம் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.

ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி, தெய்வங்களை (அம்மன்) வழிபட்டு உள்ளுணர்வை மேம்படுத்திக் கொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது. வேப்பிலையை அம்மனுக்கு சாத்தி வணங்குவதும், கூழ் ஊற்றும் விழா நடத்துவதும் ஆடி மாதத்தில் நடக்கிறது.

இதற்கு காரணம், ஆடி மாதத்தில் கிடைக்கும் வேப்பிலைக் கொழுந்துகளுக்கு அபார மருத்துவ, தெய்வீக குணம் உண்டு. ஆடி மாதத்தில் பொதுவாகவே காற்று அதிகமாக வீசும். அந்தக் காலத்தில் எளிதில் ஜீரணிக்கக் கூடிய வகையிலான உணவுகள் (கூழ்) சாப்பிடுவது நல்லது. இதனால் ஆரோக்கியம் மேம்படும்.

துர்க்கை, காளி உள்ளிட்ட பெண் தெய்வ வழிபாட்டுக்கு உரியதாகவும் ஆடி மாதம் கருதப்படுகிறது. இதேபோல் 18ஆம் பெருக்கு எனப்படும் ஆடி-18 விழா மிகவும் உன்னதமானது. அன்றைய தினம் எந்த நட்சத்திரம், திதியில் வந்தாலும், புதிய முயற்சிகளை அனைத்து தரப்பினரும் மேற்கொள்ளலாம்.

ஆடிப்பெருக்கு தினத்தில் நதியோரம் உள்ள கோயில்களில் கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். சுமங்கலிப் பெண்கள் இதுபோன்று வழிபாடு நடத்தினால் அவர்களின் துணைவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். சப்த கன்னிகளை உருவாக்கி ஆடிப் பெருக்கு வழிபாடு மேற்கொள்வதும் நல்ல பலனைத் தரும்.

இதேபோல் ஆடிப் பூரம் விழா கேரளாவில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் மிக அருமையாக கொண்டாடப்படும். சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெறுவதால் ஆடி மாதம் பல வகையிலும் சிறந்தது.

ஆடி வெள்ளி:

ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு உகந்த நாளாகும். பார்வதி தேவியின் அவதாரமான 108 அம்மன்களுக்கும் இந்த நாள் சிறப்பு தரும் நாள். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அம்மனுக்கு விரதம் இருந்து கோவிலுக்கு சென்று நெய் விளக்கேற்றி வேண்டினால் பெண்களுக்கு மாங்கல்ய ஆயுள் நீடிக்கும் என்பது ஐதீகம். அதிலும் இந்த வருடம் ஆடி முதல் வெள்ளியான நேற்று பெளர்ணமியும் சேர்ந்து வந்ததால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.

ஆடி கிருத்திகை:

 

ஆடி மாதத்தின் கிருத்திகை நாள் முருகனுக்கு உகந்த நாள். இந்த நாட்களில் அறுபடை கோவில்களிலும் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். கிருத்திகையின் போது முருகன் கோவிலுக்கு சென்று வேண்டி வருவது சிறந்த பலனை தரும்.

ஆடி பூரம்:

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளுக்கு உகந்த நாள். இந்நாளில் பெருமாள் கோவில்களில் கன்னி பெண்கள் ஆண்டாள் பாசுரம் பாடினால் விரைவில்திருமணம் கைக்கூடும் என்பது ஐதீகம்.

ஆடி அமாவாசை:

ஆடியில் வரும் ஒரே அமாவாசை நாள். இது இறந்த முன்னோர்களுக்கு உகந்த நாள். முன்னோர்களை இந்த அமாவாசை நாளில் வழிப்படுவதன் மூலம் அவர்கள் மோச்சமடைவர். மேலும் அவர்களது பரிபூரண ஆசீர்வாதங்களை பிள்ளைகள் பெற முடியும்.

ஆடி பெருக்கு:

ஆடி மாதம் தமிழகத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் நுரை பொங்க ஓடும் நாள். இந்நாளில் நீர்நிலைகளில் விளக்கேற்றி மக்கள் வழிப்படுவர். இதன்மூலம் வீட்டில் இன்பமும், செல்வமும் ஆண்டுதோறும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீ வரலட்சுமி விரதம்:

பிரம்மரின் துணைவியும், அஷ்ட லட்சுமிகளின் மூலமுமான மகாலட்சுமிக்கு விரதம் இருக்கும் நாள் வரலட்சுமி விரதம். இந்த நாளில் விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் சகல் ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

 கருட பஞ்சமி

கருடாழ்வார் ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆவார். அவரது பிறந்த தினம், “கருட பஞ்சமி” என்ற பெயரில் விரதமிருந்து கொண்டாடப்படுகிறது.

வியாச பூஜை

ஆடி மாதத்தில் வியாச பூஜை நடத்தபடுகின்றது. வியாசர் குருக்களுக்கு எல்லாம் குருக்களாக போற்றப்படுகின்றார். எனவே இம்மாதத்தில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி அன்று மாணவர்கள் வியாசரை வணங்கினால் கல்வி வளம் அதிகரிக்கும்.

துளசி வழிபாடு

ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்

இப்படி ஆடி மாதத்தில் வரும் அனைத்து விஷேச நாட்களிலும் தெய்வங்களை மனதார வணங்கி வழிபட்டு வந்தால் அனைத்து செல்வங்களையும் பெற்று சிறப்பாக வாழலாம். இதைதான் கேலியாக நமது முன்னோர்கள் ஆண்டியையும் அரசானாக்கும் ஆடி மாதம் என்று சொல்லி வைத்துள்ளார்கள்.