உலக காணாமல் போனோர் தினம்

உலக காணாமல் போனோர் தினம்
missing-people

உலகெங்கும் காணாமல்போன பல்லாயிரக் கணக்கானோர் மற்றும் அவர்கள் பற்றிய தகவல்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

முரண்பாடுகள் மற்றும் அமைதியீனத்தைக் கையாள்வதற்காக சில நாடுகளில் ஆட்களை கட்டாயமாக கடத்தி அல்லது வேறு வழியில் காணாமல் போகச் செய்யும் நடைமுறை இன்னமும் மேற்கொள்ளப்படுவதை, இந்தத் தினத்தில், ஐ நா கண்டித்திருக்கிறது.

அதேவேளை, காணாமல் போனவர்களின் குடும்பங்களின் தேவைகள் எப்போதாவதுதான் கவனிக்கப்படுவதாகக் கூறும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், அத்தகைய குடும்பங்களுக்கு மேலும் உதவிகள் தேவை என்றும் கோரியுள்ளது.

லட்சக்கணக்கானோரைக் காணவில்லை

உலகெங்கும் மொத்தமாக எத்தனை பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்பது எவருக்கும் நிச்சயமாகத் தெரியாது. ஆனால், இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

பலர் கட்டாயமாக காணாமல் செய்யப்படுகிறார்கள். குறித்த நபர்களை விரும்பாத ஒரு அரசியல் பிரமுகரோ அல்லது ஒரு இராணுவ தலைமையோ அவரை அவரது குடும்பத்தில் இருந்து அல்லது வீட்டில் இருந்து தூக்கிச் சென்று விடுகிறார்கள்.

அதன் பின்னர் அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு அவர்களது குடும்பத்துக்கு எந்தவிதமான வழியும் இல்லாமல் போய்விடும். அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதும் தெரியாமல் போய்விடும். அவர்களுக்கு முறையாக அஞ்சலி செலுத்தலாமா அல்லது முடியாதா என்பதுகூட உறவினர்களுக்கு அதன் பின்னர் தெரியாது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலை வருடக்கணக்கில் தொடரலாம் என்று கூறுகிறார் செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.

கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்படுபவர்கள் குறித்த ஐ நா சாசனம் கடந்த வருடம் முதல் அமலுக்கு வந்தது. ஆனால், கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்படுதல் இன்னமும் ஒரு கவலைக்குரிய வழமையாகவே தொடர்வதாக ஐ நா அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது

சில நாடுகளில் ஜனநாயகத்தை முறையாகக் கோருவோரை அடக்கவோ, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அடக்கவோ அல்லது பயங்கரவாதத்தை அடக்கவோ இது ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாகவும் ஐநா அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆனால் இப்படியான அனைத்து சம்பவங்களிலும், கட்டாயமாகக் காணாமல் செய்யப்படுதல் தடை செய்யப்பட வேண்டும் என்றும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உரித்துடையவர்கள் என்றும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை அவர்களது குடும்பத்தினருக்கு உள்ளது என்றும் ஐநா வலியுறுத்துகிறது.