ஆடி மாதம் பதினெட்டாம் நாள்

நீரோடும் நிலத்தோடும் காலத்தோடும் தொடர்புடைய அறிவியல்பூர்வமான மரபு விழா.

ஆடி மாதம் பதினெட்டாம் நாள்

ஆற்றங்கரையோரம் முழுவதும் உற்சாகக் கோலாகலம்தான். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எல்லோருக்கும் கொண்டாட்டம்தான் என்றாலும் குறிப்பாக இதைப் பெண்கள் திருவிழாவாகவே நடத்துவதைக் காண முடியும். காலையில் எழுந்து குளித்து முடித்து பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கலப் பொருட்களோடு தன் வயதொத்தவர்களோடு கிளம்புவார்கள் பெண்கள். சிறு தேர் உருட்டும் சிறுமிகள், சில்லிக்கோடு அடிக்கும் இளம் பெண்கள், தற்போதுதான் திருமணமாகியிருக்கும் குமருகள், திருமணமான இளம் மற்றும் நடுத்தர வயதுப் பெண்கள், வயோதிகப் பெண்கள் என்று எல்லாப் பருவத்தினரும் ஆற்றங்கரைக்குப் போகக் கிளம்புவதில் இருந்தே கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும்.

ஆற்றங்கரைக்குப் போவதற்கு முன் கலப்பு சாதம் செய்ய அதிகாலை நான்கு மணியில் இருந்தே வேலை தொடங்கிவிடும். ‘‘கொஞ்சம் எலுமிச்சை பழத்தை பிழிஞ்சு கொடுங்களேன், தேங்காயை துருவி கொடுங்களேன்’’ என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என்று எல்லாம் செய்து முடித்து அவற்றை ஆற்றுக்கு எடுத்துப் போக பாத்திரத்தில் அடைத்துவைப்பார்கள். அதன் பிறகு காலை சிற்றுண்டி தயார் செய்து முடிப்பார்கள். அதன் பிறகு ஆற்றுக்குக் கிளம்பும் வைபவம் தொடங்கும்.

காவிரிக் கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் நிறை குடத்தில் இருந்து தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சிறிதளவு கரைக்க வேண்டும். அந்த நீரை, விளக்கின் முன் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். காவிரியையும், தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

காவிரியில் ராமன் ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். “அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, ‘தட்சிண கங்கை’ என்று பெயர். அந்த நதியில் நீராடினால் உன்னுடைய பாவ உணர்வுகள் நீங்கும்” என்று வசிஷ்டர் கூறினார். அதன்படி ராமச்சந்திர மூர்த்தி காவிரியில் நீராடிய நாள் ‘ஆடிப்பெருக்கு’ என்று ஒரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

மங்களச் சரடு தென்னிந்தியாவில் திரிவேணி எனப்படும் பவானி கூடுதுறையில், சங்கமேஸ்வரர் கோவிலின் நடை ஆடிப் பதினெட்டு அன்று அதி காலையில் திறக்கப்படும். மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை, பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை. பெருமாள் தரும் சீர்வரிசை காவிரி அன்னை ரங்கநாதரின் தங்கையாகக் கருதப்படுகிறாள். இந்நாளில், சமயபுரம் பகுதியில் திருவிழா கோலமாக இருக்கும். இவ்வூருக்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளையும், மைத்துனர் களையும் வீட்டிற்கு வரவழைத்து சீர் கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. தம்பதியரை இங்குள்ள ஆதிமாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்வர். இவள் சமயபுரம் மாரியம்மனின் சகோதரியாக கருதப்படுகிறாள். சாதாரண மக்களே இவ்வாறு சீர்கொடுக்கும் போது, இங்கே கோவில் கொண்டிருக்கும் ரங்கநாதர் சும்மா இருப்பாரா! அவரும் தன்னுடைய தங்கைக்கு சீர்வரிசை வழங்குகிறார். எப்படி தெரியுமா?

ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் பெருமாள், ஆடிப்பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித் துறைக்கு எழுந்தருள்வார். அங்கு அவருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படும். பின்னர் ஸ்ரீரங்கம் ஆலயத்தில் இருந்து அன்று மாலை நேரத்தில் புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை-பாக்கு, பழங்கள் முதலிய சீர் வரிசைகளை யானை மேல் ஏற்றி அம்மா மண்டபம் படித்துறைக்குக் கொண்டு வருவார்கள். பெருமாள் முன் அந்தச் சீர்வரிசைகளை வைத்து, ஆராதனைகள் செய்வார்கள். பிறகு அவற்றை காவிரி அன்னைக்கு சமர்ப்பிப்பார்கள். காவிரிக்கு, பெருமாள் சீர்வரிசை அளிக்கும் இந்தக் காட்சியைக் கண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆபரணங்கள் வாங்கலாம் அட்சய திரிதியை விட, ஆடிப்பெருக்கு நன்னாள் நகை வாங்க சிறப்பானது என்று கருதப்படுகிறது. இந்த நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் தொடங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர். ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் தொடங்க பலரும் தயங்குவார்கள். ஆனால் ஆடிப்பெருக்கு அவற்றுக்கெல்லாம் விதிவிலக்காகும்.